Published : 12 Jul 2020 07:15 AM
Last Updated : 12 Jul 2020 07:15 AM

கரோனா குறித்த உண்மைகளை மூடி மறைத்துவிட்டது சீனா: அமெரிக்கா தப்பிய ஹாங்காங் பெண் விஞ்ஞானி தகவல்

‘‘கரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மூடி மறைத்துவிட்டன’’ என்று ஹாங்காங் பெண் விஞ்ஞானி லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வைரஸ் குறித்த உண்மைகளை வெளியிட்ட மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் திடீரென காணாமல் போயினர்.

சீனாவின் ஆட்சிக்கு உட்பட்டஹாங்காங்கை சேர்ந்த மருத்துவர் லீ மெங் யான். ஹாங்காங்பல்கலைக்கழக விஞ்ஞானியான அவர், வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்து வந்தார். ஹாங்காங்கில் இருந்து தப்பி அவர்அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அங்கு தனியார்தொலைக்காட்சிக்கு லீ மெங் யாங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பரில் வூஹானில் கரோனா வைரஸ் பரவிய போது, அந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்ல முயன்றேன். ஆனால் சீன அரசு அனுமதி வழங்கவில்லை. வூஹானில் பணியாற்றும் சில மருத்துவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. குடும்பம், குடும்பமாக வைரஸ் தொற்றுகிறது என்று அவர்கள் கூறினர்.

சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைத்தன. மனிதர்களிடம் இருந்து மனிதர்
களுக்கு கரோனா பரவவில்லை என்று வாதிட்டன. பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன.

வைரஸ் குறித்த விவரங்களை எனது துறையின் மூத்த விஞ்ஞானியிடம் தெரிவித்தேன். அப்போது அவர், ‘சிவப்பு கோட்டை தொடாதே’ என்று என்னை எச்சரித்தார். வைரஸ் குறித்த உண்மைகளை சொல்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

உலக சுகாதார அமைப்பு, சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல், முறைகேடுகள் எனக்கு நன்றாகவே தெரியும். எனினும் வைரஸ் குறித்து மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.

உண்மையை சொல்வதற்காக ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி வந்தேன். எனது உயிருக்கு இன்றளவும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சீன அரசு முயற்சிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் குறி வைத்து சைபர் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. ஹாங்காங் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எனது பக்கம் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லீ மெங் யாங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x