

பிரேசிலில் குளிர் காலத்தில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக வரலாறு காணாத பொருளாதார சரிவை உலக நாடுகள் சந்தித்துள்ளன.
அந்த வகையில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறக்குமாறு மாகாண மேயர்களிடம் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்
இந்த நிலையில் பிரேசிலில் தளர்வுகள் மேற்கொண்டால் குளிர்காலத்தில் பிரேசிலில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனது வழக்கமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இயலாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனோரா கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.