Last Updated : 11 Jul, 2020 07:58 AM

 

Published : 11 Jul 2020 07:58 AM
Last Updated : 11 Jul 2020 07:58 AM

சிங்கப்பூர் தேர்தல்: அரை நூற்றாண்டாக ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது: எதிர்க்கட்சிக்கு 10 இடங்கள்


கரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு இடையே சிங்கப்பூரில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது
எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி(டபிள்யுபி) எப்போதும் இல்லாத வகையில் 10 இடங்களைக் கைப்பற்றியது.

சிங்கப்பூரில் கடந்த 1959-ம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் இந்த முறையும் ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் தலைமையிலான ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அறிவித்து. கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே தேர்தல் மிகவும் பாதுகாப்பாக நடந்தது.

கடந்த தேர்தலில் 880 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தைத் தவிர்க்க 1,100 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் வாக்களிக்கவும் கூடுதலாக 2 மணிநேரம் வழங்கப்பட்டது.மக்கள் முகக்கவசம் அணிந்து மிகவும் கட்டுக்கோப்பாக வந்து வாக்களித்தனர்.

மொத்தமுள்ள 93 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 83 இடங்களை ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி அதாவது 93 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது. 10 இடங்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி வென்றது. கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் செயல் கட்சி 69.9 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் இந்த முறை 61 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் லீ சியன் லுங் கூறுகையில் “ அதிகமான பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு இருப்பதையே காட்டுகிறது

இந்த வெற்றியை நாங்கள் பொறுப்புடன் பயன்படுத்தி, கரோனா வைரஸ் பாதிப்பு, பொருளதாார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்க உழைப்போம். இந்த நெருக்கடி காலத்தில் மக்களின் வலியையும், பதற்றத்தையும் காட்டுகிறது. தொழிலாளர் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவராகிறார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

இந்த தேர்தலுக்கு பின் அனைத்து பொறுப்புகளையும் அடுத்த தலைமுறை தலைவர்களிடம் ஒப்படைக்க இருக்கும் வேளையில் கரோனா வைரஸ் தொற்று நாட்டை பாதித்து நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதை எதிர்பார்க்கவில்லை. மூத்த அமைச்சர்கள் சண்முகரத்தினம், க.சண்முகம், டியோ சீ ஹியன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிங்கப்பூரை நெருக்கடியிலிருந்து மீட்போம் “ எனத் தெரிவித்தார்

சிங்கப்பூரில் உள்ள அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகளையும் ஹவ்காங் தனித்தொகுதியையும் வென்று முதன் முறையாக பத்து இடங்களை தொழிலாளர்கள் கட்சிப் பிடித்தது. இரண்டு குழுத்தொகுதிகளை ஆளும் மக்கள் செயல் கட்சி இழந்ததும் இதுவே முதன் முறை.

தற்போது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் இரு தொகுதியில்லா உறுப்பினர்கள் என மொத்தம் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x