Published : 10 Jul 2020 12:23 PM
Last Updated : 10 Jul 2020 12:23 PM
அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 1,29,000 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சேர்க்கை எண்ணிக்கை 75 சதவீதத்துக்கு அதிகமாக நிறைவடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், “டெக்சாஸ் போன்ற மாகாணத்தில் மருத்துவமனைகளில் 80% படுக்கைகள் பூர்த்தியாகிவிட்டன. அங்குள்ள அவசரப் பிரிவு அறைகள் பாதிக்கும் மேல் பூர்த்தியாக்கிவிட்டது. பெரும்பாலான மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக பிற அறுவைசிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன ” என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT