Published : 08 Jul 2020 09:24 PM
Last Updated : 08 Jul 2020 09:24 PM

பெய்ஜிங் கரோனா தொற்று: சீனாவுக்கு வரும் உலக சுகாதார அமைப்பின் குழு

பெய்ஜிங்கில் கரோனா தொற்று எங்கு ஆரம்பித்தது என்பதைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழு தம் நாட்டிற்கு வரவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “ஆலோசனைகளுக்குப் பிறகு, பெய்ஜிங்கில் கரோனா பரவல் எங்கு ஆரம்பித்தது என்பதைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பின் குழு எங்கள் நாட்டிற்கு வருகிறது. இந்த ஆய்வுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. அங்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் இருந்து நாளொன்றுக்கு ஒருவர், ஒரு முறை மட்டுமே வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x