முகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபர்; கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ: கோப்புப்படம்
பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ய பிரேசில் அதிபருக்கு தற்போது கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

பிரேசிலில் 16,23,284 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 65,487 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது வழக்கமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருக்கும்போது, மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் போல்சோனாரோ.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சோனாரோ பேசி வந்தார்.

அவர் போல்சோனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை.தலைநகர் பிரேசிலை விட்டு அதிபர் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in