Published : 07 Jul 2020 09:32 PM
Last Updated : 07 Jul 2020 09:32 PM
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் நேற்று 163 பேர் கரோனாவுக்குப் பலியான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர்வரை கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 2,45,688 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 31 மாகாணங்களில் கரோனா தொற்றுப் பரவல் உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்திருந்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT