Published : 07 Jul 2020 01:05 PM
Last Updated : 07 Jul 2020 01:05 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், சுமார் 20 லட்சம் மக்களுக்குக் கரோனா பரிசோதனை செய்ய இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் செய்தித் தொடர்பாளர் அம்னா அல் ஷாம்சி கூறும்போது, “ஜூன் 24 ஆம் தேதி முதல் வர்த்தக முன்னேற்றத்துக்காக ஊரடங்கில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. சுற்றுலாப் பயணிகளுக்கும் துபாயில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம் பேருக்கு அடுத்து வரும் 2 மாதங்களில் கரோனாவுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் 528 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 52,068 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 324 பேர் பலியாகி உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றான துபாயில் ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்குக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச குழுவுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிகள் வழங்கி வருகிறது. இதுவரையில் 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x