

ஜப்பானில் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 44 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர்.
இதுகுறித்து கியோடோ வெளியிட்ட செய்தியில், ''ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 44 பேர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை காரணமாக நாகசாகி, சாகா போன்ற பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கரோனா பரவல்
ஜப்பானில் கரோனா பரவும் வேகம் சற்று குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஊரடங்கு அவசர நிலையைத் திரும்பப் பெறவுள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் ஜப்பானின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் முகக்கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 19,522 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 17,050 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 977 பேர் பலியாகியுள்ளனர்.