Published : 06 Jul 2020 04:21 PM
Last Updated : 06 Jul 2020 04:21 PM

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: 24 மணி நேரத்தில் 45,283 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 45,283 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் கூறும்போது, “ அமெரிக்காவில் 45,283 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 28,39,917 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 242 பேர் பலியாகினர். அமெரிக்காவில் சுமார் 1,30,000 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் சுமார் 50,000 பேர் வரை கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

அமெரிக்காவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என அச்சப்படுவதாக அந்நாட்டின் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x