Published : 03 Jul 2020 07:49 AM
Last Updated : 03 Jul 2020 07:49 AM

நேபாள பிரதமர் சர்மாவுக்கு ஆளும் கட்சியில் நெருக்கடி: அதிபர் பித்யா தேவியுடன் நேரில் சந்திப்பு

இந்திய பகுதிகள் சிலவற்றை நேபாளம் உரிமை கொண்டாடி அந்நாட்டுவரைபடத்தில் மாற்றம் செய்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் எல்லை பிரச்சினை தொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே பிரதமர் சர்மா ஒலிக்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்த போது குழு உறுப்பினர்கள் 18 பேரில் 17 பேர் சர்மா ஒலி பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தினர். பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டதால் பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும்என்று முன்னாள் பிரதமர் பிரசண்டா உள்ளிட்ட தலைவர்கள் கோரினர். அதே நேரம் அமைச்சர்கள், ஆதரவாளர்களுடன் சர்மா ஒலி தனியாக ஆலோசனை நடத்தினார்.

கட்சியில் பிளவு ஏற்படலாம்என்றும் பிரசண்டா தலைமையிலான அணியினருடன் சமாதான முயற்சி மேற்கொள்ளுமாறும்சர்மா ஒலிக்கு அவரது ஆதரவாளர்கள் அறிவுறுத்தியதாக நேற்று காலை செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, அதிபர் பித்யா தேவி பண்டாரியை பிரதமர் சர்மா ஒலி நேற்று காலை திடீரென சந்தித்து, நேபாள அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால் நேபாளத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x