Published : 02 Jul 2020 05:54 PM
Last Updated : 02 Jul 2020 05:54 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும் அவரது மனைவியும் தற்போது குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் சில நாடுகளில் கரோனோவுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் அதற்கான பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்ற அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா, குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் குவிந்தது சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் அந்தத் தொடரில் கலந்துகொண்ட வீரர்களுக்கு சில நாட்களாக கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்தத் தொடரில் கலந்துகொண்ட ஜோகோவிச்சுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், எனினும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் ஜோகோவிச் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜோகோவிச்சும் அவரது மனைவியும் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அவர்களது ஊடகக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோகோவிச்சின் ஊடகக் குழு வெளியிட்ட செய்தியில், “கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 10 நாட்களாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஜோகோவிச்சும், அவரது மனைவியும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT