Published : 02 Jul 2020 01:50 PM
Last Updated : 02 Jul 2020 01:50 PM
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக கடும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தை பிரதமர் புறக்கணித்துள்ளார்.
நேபாளம் சமீபகாலமாக இந்தியாவுடன் மோதல் போக்கையும், சீனாவுடன் நெருக்கத்தையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதியான கலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தன்னுடைய நிலப்பகுதி எனக் கூறி அதை வரைப்படத்தில் சேர்த்து, அதை நாடாளுமன்றத்தில் திருத்தி தாக்கல் செய்து நிறைவேற்றியது.
நேபாளத்தின் இந்த செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. நேபாளத்தின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, செயற்கையாக தனது நிலப்பகுதியை விரிவுபடுத்த நேபாளம் முயல்கிறது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
கடந்த மே 8-ம் தேதி உத்தரகண்ட் மாநிலம் தார்ச்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அதன்பின் இந்தியாவுடன் தீவிரமான மோதல் போக்கை நேபாளம் கையாண்டு வருகிறது
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா மீது மறைமுகமாக குற்றச்சாட்டு வைத்தார். இந்தியா எனப் பெயரைக் குறிப்பிடாமல் தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு அன்னிய நாட்டு சக்திகள் முயல்கின்றன. பல்வேறு தூதரகங்கள், ஹோட்டல்கள் மூலம் தங்கியிருப்பவர்கள் உள்நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை பதவி நீக்கம் செய்ய முயல்கிறார்கள் என்று பகீர் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
நேபாள பிரதமர் சர்மா ஒளி இந்தியாவின் மீதும் மறைமுகமாகக் குற்றம்சாட்டியது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இதையடுத்து, நேபாள பிரதமர் ஒளியின் பேச்சை முன்னாள் பிரதமர் பிரசண்டா கடுமையாகக் கண்டித்தார். அவர் பேசுகையில் “ பிரதமர் ஒளி கடந்த இரு நாட்களுக்கு முன் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் முறையானது அல்ல, ராஜங்கரீதியாகவும் சரியானது அல்ல. இதுபோன்று பிரதமராக இருந்து கொண்டு ஒருவர் பேசுவது இந்தியாவுடன் நமக்கிருக்கும் நட்புறவை மோசமாக்கிவிடும். அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் “ என வலியுறுத்தினார்
இதைக் கருத்தை ஆளும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாள், ஜால்நாத் கானல், பாம்தேவ் கவுதம், நாராயண்காஞ்ச் ஸ்ரீஸ்தா ஆகியோர் கூறினர்,
பிரதமர் ஒலியிடம் கேள்வி எழுப்பினார்கள், இல்லாவிட்டால் பதவியைவிட்டு விலகுகங்கள் என்று வலியுறுத்தினர்.
இந்தநிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமிக்க நிலைக்குழுக் கூட்டம் இன்று பலுவட்டார் நகரில் நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் பிரச்சண்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் பிரதமரும் கட்சியின் மூத்த தலைவருமான சர்மா ஒலி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நிலைக்குழுவில் பிரதமருக்கு ஆதரவு குறைந்துவிட்டது 57 உறுப்பினர்கள் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். இதனால் ஒலி கூட்டத்தை புறக்கணித்தாக தெரிகிறது. அவருக்கு எதிராக கூட்டத்தில் தீ்ர்மானம் நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு ஒரு பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஒலி தனியாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் கட்சியில் தனக்கு ஆதரவு இல்லாத சூழலில் அரசை நடத்த முடிவெடுத்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை முடக்காமல் கூட்டத்தொடரை நிறுத்தி வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT