Published : 01 Jul 2020 08:12 PM
Last Updated : 01 Jul 2020 08:12 PM

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,528 பேருக்குக் கரோனா; 1,199 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேர் பலியாகி இருப்பதாக மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1,27,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 45,528 பேருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் நீடித்து வந்த போதிலும் கடந்த மாதத்தில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக ப்ளோரிடா, டெக்சாஸ், அரிசோனா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என அச்சப்படுவதாக அந்நாட்டின் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x