

கரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை எளிதில் தாக்கக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறி வருகிற நிலையில், எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் அந்நாட்டுப் பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும். அதன் காரணமாக கரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி கருவுறுதலைப் பெண்கள் தற்காலிகமாகத் தள்ளிவைக்க வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நடைப்பயிற்சி மிகச் சிறந்த உடற்பயிற்சி. ஆனால், தற்போதைய கரோனா காலகட்டத்தில் கர்ப்பணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளிவருது ஆபத்தாக முடியும். எனவே வீட்டுக்குள்ளே அவர்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .
எகிப்து அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறிய எகிப்திய மருத்துவர் ஜைனப் அப்தல் மிகுயித், இந்த முடிவு நோய் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
9.9 கோடி மக்கள்தொகை கொண்ட எகிப்தில் இதுவரையில் 66,754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17,951 பேர் குணமாகியுள்ள நிலையில் 2,872 பேர் பலியாகியுள்ளனர்.