Published : 30 Jun 2020 04:55 PM
Last Updated : 30 Jun 2020 04:55 PM

அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவு அரசியல் பயன்களுக்காகவும் மரண தண்டனையை சீனா பயன்படுத்துகிறதா?

ஜூன் 13ம் தேதியன்று ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கார்ம் கில்லஸ்பி என்பவருக்கு போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து சீன கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து தன் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவுக் கொள்கையின் சுயலாபங்களுக்காக மரண தண்டனையை சீனா பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கார்ம் கில்லஸ்பி சிட்னியைச் சேர்ந்த நடிகர் ஆனால் இவர் முதலீட்டு ஆலோசகராக தன் தொழிலை மாற்றி கொண்டார். இவர் மெதம்பிடமைன் என்ற ஒரு போதை மருந்தை 7.5 கிலோ வைத்திருந்ததாகவும் அதனை கடத்த முயன்றதாகவும் 2013 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று காங்சூவில் பையுன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் ரகசியமாக 7 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டதே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகுதான் தெரியவந்தது என்றால் சீனாவின் நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு எப்படி இம்மியளவும் வெளிப்படைத்தன்மையில்லாது செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வாணிப மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து ஆஸ்திரேலியா தன் நாட்டைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, “எந்த சமயத்திலும் யாருக்காக இருந்தாலும் மரண தண்டனையை ஆஸ்திரேலியா எதிர்க்கிறது. எங்கள் நாட்டு குடிமகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை எங்களுக்கு வெறுப்பூட்டுவதோடு, மிகவும் மனவலியைத் தருகிறது, மரண தண்டனையை உலகம் முழுதும் ரத்து செய்ய நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறும்போது, “சீனாவில் ஆஸி. குடிமகனுக்கு மரண தண்டனை விதித்ததைப் பற்றி நாங்கள் கவலை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சீனாவின் மூடுண்ட விசாரணை, போலீஸ், நீதி நடவடிக்கைகள்:

கில்லஸ்பி எந்த அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டார், அவருக்கான சட்ட உதவி கிடைத்ததா அவரை மரண தண்டனை குற்றவாளியாகக் கருதும் நடைமுறைகள் பற்றி எதுவும் வெளி உலகுக்குத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு கனடாவுடன் சீனாவுக்கு சிலபல உரசல்கள் ஏற்பட்டதையடுத்து கனடாவைச் சேர்ந்த 2 குடிமகன்களுக்கு இதே போல் போதை மருந்துக் கடத்தல் வழக்கில் மரண தண்டனை அளித்தது. இதற்கும் காரணம் இருக்கிறது சீன நிறுவனமான ஹூவேயின் அதிகாரி மெங் வாங்சூவை கனடா கைது செய்தது. கனடா நாட்டு குடிமகன்களை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கனடா எத்தனைப் போராடியும் அவர்கள் அந்த நாட்டினால் சீனாவின் கோர மரண விலங்குக்கு இரையாவதைத் தடுக்க முடியவில்லை.

அம்னெஸ்டி அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி சீனாவில்தான் உலகிலேயே அதிகப்படியான மரண தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. (ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு மரண தண்டனை). பெரும்பாலும் கொலைக்குற்றம் அல்லது போதை மருந்து கடத்தல் விவகாரங்களுக்காகத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்பது அதிகாரப்பூர்வ தகவல்.

மேலும் அம்னெஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகும், “போதை மருந்து வழக்குகளில் மரண தண்டனை என்பது அயல்நாடுகளுடனான அரசியல் பிரச்சினைகளுக்கு இடையில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் சீன ஆய்வாளர் யாகி வாங் என்பவர் கூறும்போது, “மரண தண்டனை என்பது சீனாவுக்கு நீண்ட காலமாகவே ஒரு அரசியல் உபகரணமாகும். தங்கள் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட மரண தண்டனை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் ஆயுதமே” என்றார்.

தற்போது அயல்நாட்டு விவகாரங்களில் அரசியல் ஆதாயங்களுக்காக மரண தண்டனை ஒரு ஆயுதமாக சீனாவில் பயன்படுத்தப்படுகிறதா என்பது கனடா, மற்றும் ஆஸ்திரேலியா குடிமகன்கள் மரண தண்டனை எழுப்பும் கேள்வியாகும்.

சீன அதிபர் ஜின்பிங் பதவியேற்றது முதலே நாட்டின் சட்ட அமைப்பு பிற்போக்குத்தனமாக மாறி வருவதாக யாகி வாங் குற்றம்சாட்டுகிறார்.

(ஏஎன்ஐ உள்ளிட்ட ஏஜென்சி தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x