Published : 30 Jun 2020 11:23 AM
Last Updated : 30 Jun 2020 11:23 AM
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு மேலும் 18 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.
மனிதாபிமான காரணங்கள் தவிர்த்து பிற தேவைகளுக்கான பயணத் தடை தொடரும் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டும் உலக நாடுகள் எல்லைக் கட்டுப்பாட்டைத் தொடர்கின்றன. அந்த வகையில் ஜப்பான் அரசும் கரோனா தொற்று அதிக பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடை விதித்திருந்தது. தற்போது மேலும் 18 நாடுகள் இப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ளன.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “ஜப்பான் பயணத் தடையில் மேலும் 18 நாடுகள் சேர்க்கப்படவுள்ளன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகளின் விவரம் ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கரோனா தொற்று அதிகமுள்ள 129 நாடுகளுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 6 முக்கியப் பிராந்தியங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொழில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் ஜப்பான் அதன் தனித்துவமான வழிமுறைகளைக் கொண்டு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கரோனா வைரஸுக்கு 18,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,557 பேர் குணமடைந்த நிலையில், 972 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT