Last Updated : 14 Sep, 2015 01:12 PM

 

Published : 14 Sep 2015 01:12 PM
Last Updated : 14 Sep 2015 01:12 PM

தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம்

ஆப்கானிஸ்தானின் முக்கிய சிறைச்சாலையை தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் சுமார் 400 கைதிகள் தப்பி ஓடினர்.

ஆப்கானிஸ்தானின் காஸினி மாகாணத்தில் அந்நாட்டின் முக்கிய சிறைச்சாலை உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு ராணுவ உடையில் இருந்த தாலிபான்கள் முதலில் கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். தொடர்ந்து சிறைத் துறையினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சிறை கதவுகளை தகர்த்ததாக மாகாண ஆளுநர் முகமது அலி அகமதி தெரிவித்தார்.

உள்ளே இருந்த 400 கைதிகள் தப்பித்ததாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பல போலீஸார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பலியானதாகவும் தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தாலிபான் தீவிரவாதிகள், தற்போது சிறை தங்கள் கட்டுப்பட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 400 அப்பாவி சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும், முஜாகீதின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு இதேபோல, கந்தஹார் சிறைச்சாலையை தாலிபான்கள் உடைத்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை விடுவித்தனர். அந்தச் சம்பவத்தை நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு பேரழிவாக ஆப்கான் அரசு குறிப்பிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x