

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “சிரியாவின் மத்தியப் பகுதியில் பல்மைரா மற்றும் அஸ் சுஹ்னா பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இரு தினங்களுக்கு முன்னர்தான் சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு மாதங்களில் சிரியாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
கரோனா பாதிப்பு
சிரியாவில் கரோனா காரணமாக போர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சிரியாவில் 242 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர்.