Published : 26 Jun 2020 04:19 PM
Last Updated : 26 Jun 2020 04:19 PM

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 6,20,794 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யாவில் நேற்று மட்டும் 6,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 813 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் இதுவரை 6,20,794 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,781 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்த நிலையில் கரோனா இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் குறைவாகவுள்ளதைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துவிட்டது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போதுவரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாகக் கூறப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x