Published : 26 Jun 2020 02:53 PM
Last Updated : 26 Jun 2020 02:53 PM

2 கோடி அமெரிக்கர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் கரோனா பரவல் தீவிர நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழலில் வியாழக்கிழமை மட்டும் அமெரிக்காவில் சுமார் 39,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் சுமார் 2 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ''அமெரிக்காவில் கரோனா பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அதாவது பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளில் இடைவெளிவிடும்போது சிலர் விடுபட்டுவிடுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரையில் 24 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.24 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x