Published : 25 Jun 2020 02:57 PM
Last Updated : 25 Jun 2020 02:57 PM

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்: 25 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்கள் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் பால்க் மாவட்டத்தில் உள்ள அபாத் கிராமத்தில் தலிபான்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 25 தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பத்ஹிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் புதன்கிழமை தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த விவசாயி ஒருவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒரு பெண், குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து ராணுவம் தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருதரப்பும் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x