

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ''ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணத்தில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த ஒருவாரமாக விக்டோரியா மாகாணத்தில் இரட்டை இலக்க எண்களில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ராணுவ உதவியுடன் நிறைய பரிசோதனைகளைச் செய்து முடிவுகளை விரைவாகப் பெறலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள். பரிசோதனைகளைச் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கரோனா இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸால் இதுவரை 7,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,915 பேர் குணமடைந்துள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.