Last Updated : 23 Jun, 2020 08:54 AM

 

Published : 23 Jun 2020 08:54 AM
Last Updated : 23 Jun 2020 08:54 AM

இந்திய ஐடி ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு: 2020ம் ஆண்டு இறுதிவரை ஹெச்-1பி விசா வழங்குவது நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார்.

ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு நாளை(24-ம் தேதி) முதல்நடைமுறைக்கு வருகிறது.

ஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால் இந்திய ஐடி பொறியாளர்களுக்குப் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், விசா பெற்றவர்களும் இந்த ஆண்டுஇறுதிவரை செல்ல முடியாத சூழல் ஏற்படும்.

இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவுக்குள் வேலைநிமி்த்தமாக ஹெச்-1பி, ஹெச்-2பி, எல் விசா மூலம் வருபவர்கள் தடை செய்யப்படுவார்கள், மிக்குறைந்த அத்தியாவசியமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம், பயிற்சி, ஆசிரியர், கவுன்சிலர்,கோடைகால பணித் தி்ட்டம் ஆகியவற்றாகக் ஜே விசாவில் வருவோருக்கும் இந்த தடை பொருந்தும்.

இந்த புதிய விதிமுறை அமெரி்க்காவில் வசிக்காமல் முறையான குடியேற்ற ஆவணங்கள், பயண ஆவணங்கள், விசா இல்லாமல் இருப்போருக்கு பொருந்தும். அதேசமயம், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெளிநாடுகளை் சேர்ந்தவர்கள், அவர்களின் மனைவி, குழந்தைகளை இந்த உத்தரவு பாதிக்காது.

கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவால் வேலையிழந்த லட்சக்கணக்கான அமெரிக்க மக்களுக்கு உள்நாட்டில் வேலைகிடைக்க இந்த ஹெச்1பி விசா வழங்குவது நிறுத்திவைக்கும் உத்தரவு பெரும் உதவியாகவும், அவசியத் தேவையாகவும் இருக்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை ஆகியவற்றை புறந்தள்ளி இந்த உத்தரவை அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்

2021-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்காவின் புதிய நிதியாண்டு பிறக்கிறது. இந்த புதிய நிதியாண்டுக்காக ஏற்கெனவே இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கும், பல்வேறு அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற உள்ளோருக்கும் ஹெச்1பி விசா வழங்கப்பட்டுவிட்டது. அந்த விசா பெற்றவர்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்காவுக்கு பணியாற்ற வர முடியாது. 2021-ம் ஆண்டு பிறக்கும் வரை அவர் காத்திருக்க வேண்டும்.

மேலும் புதிதாக க்ரீன் கார்டு வழங்கும் நடைமுறையும் இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்தும் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க தொழிலாளர் சந்தையில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதை மனதில்கொண்டுதான் ஹெச்1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது இருக்கும் எதி்ர்பாராத சூழலில், வேலையின்மை அதிகரித்து வரும் போது, உள்நாட்டு மக்களின் வேலைவாய்பை அதிகரிக்க இந்த உத்தரவு அவசியம்

அமெரிக்காவில் பிப்ரவரி முதல் மே வரை வேலையின்மை அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவின் மூலம் அமெரிக்க ஊழியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள மற்ற ஊழியர்களுக்கு எதிராக அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான ஊழியர்கள், அவர்கள் வருவது மட்டுமல்லாமல் தங்களின் மனைவி, குழந்தைகளையும அழைத்து வந்து அமெரிக்காவின் வேலைவாய்ப்புக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது சாதாரண காலங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, பொருளாதாரத்தில் அசாதாரண சூழல் நிலவும்போது வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கும்

உதாரணமாக, அமெரிக்காவில் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 1.70 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த ஹெச்-2பி விசா, ஹெச்1பி விசா மூலம் வேலையாட்களை நிரப்பக் கோருகிறார்கள்.

ஹெச்1பி, ஹெ-2பி, ஜே மற்றும எல் விசா ஆகியவற்றின் மூலம் அமெரி்க்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் அமெரிக்க வேலைவாய்ப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதிகமான வேலையாட்கள் இருப்பதும் பொருளாதாரத்துக்கும், தொழிலாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x