Published : 22 Jun 2020 09:54 AM
Last Updated : 22 Jun 2020 09:54 AM
பிரேசிலில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 640 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,617 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைச்சகம் தரப்பில், “ பிரேசிலில் கரோனா வைரஸால் ஏற்படும் பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் கரோனாவுக்கு 640 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்கள் எண்ணிக்கை 50,617 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 17,400 பேருக்கு
கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் கரோனாவால் இதுவரை 10,85,038 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்தார். மேலும் பிரேசிலில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை அமல்படுத்தின. ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் அதிபர் பேசி வந்தார்.
மேலும் கரோனா விவகாரத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா சரியாக கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை பிரேசில் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT