Published : 20 Jun 2020 03:24 PM
Last Updated : 20 Jun 2020 03:24 PM

இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 45,029 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் புதிதாக 1,226 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் இன்று (சனிக்கிழமை) கூறும்போது, “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,226 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பு எண்ணிகை 45,029 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 56 பேர் பலியான நிலையில் இதுவரை இந்தோனேசியாவில் 2, 429 பேர் கரோனாவுக்கு பலியாயுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளிலே இந்தோனேசியாவில்தான் சீனாவுக்கு அடுத்து அதிகப்படியான உயிரிழப்பு கரோனாவால் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தொழில் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உள்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அவசரத் தேவைகளைக் கணக்கில்கொண்டு போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இந்தோனேசிய அரசு கடந்த மாதம் தளர்த்தியது.

மேலும், அங்கு விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x