Published : 20 Jun 2020 11:06 AM
Last Updated : 20 Jun 2020 11:06 AM
பிரேசிலில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,32, 913 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 49,090 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 5,07,000 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்தார். மேலும் பிரேசிலில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை அமல்படுத்தின. ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் அதிபர் பேசி வந்தார்.
மேலும் கரோனா விவகாரத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா சரியாக கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை பிரேசில் மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT