Published : 20 Jun 2020 07:05 AM
Last Updated : 20 Jun 2020 07:05 AM

இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை: அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை

இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய நிதிக்குழு உறுப்பினராக உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு 70 சதவீத வரி விதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று செனட் உறுப்பினர் கான்ட்வெல் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். அதிக வரி விதித்தால் இந்தியாவுக்கு ஆப்பிளை எப்படி அனுப்ப முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா பல மடங்கு அதிக வரி விதிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தப்படுகிறது. இந்தியாவுடன் தாராள வர்த்தக பரிவர்த்தனை (எப்டிஏ) மேற்கொள்ளவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது. வர்த்தக பரிவர்த்தனை மட்டுமின்றி முதலீடு குறித்தும் பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக செனட்டர் ஸ்டீவ் டேய்ன்ஸ் சுட்டிக்காட்டினார். மொன்டானா பகுதியில் அதிக அளவில் பருப்பு விளைவிக்கப்படுகிறது. அதிக வரி விதிப்பு மொன்டானா விவசாயிகளுக்கு பாதிப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். அதிக வரி விதிக்கப்படுவதால் அமெரிக்க பருப்பு வகைகள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது. இதனால் இந்திய பருப்பு வகைகளுடன் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் விரும்பப்படும் நாடு (எம்எப்என்) அந்தஸ்து வழங்கினாலும் இந்தியா பருப்பு வகைகளுக்கு அதிக வரி விதிக்கிறது. இதுகுறித்து உலக வர்த்தக மையத்திடமும் (டபிள்யூடிஓ) முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x