Published : 19 Jun 2020 05:10 PM
Last Updated : 19 Jun 2020 05:10 PM

கரோனா சோதனையை அதிகப்படுத்த ஏமனுக்கு வந்தடைந்த மருத்துவ உபகரணங்கள்

போர் பாதிப்பு நாடான ஏமனுக்கு கரோனா வைரஸ் சோதனைகளை அதிகப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் தன்னார்வ அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் வந்தடைந்துள்ளன.

இதுகுறித்து சாபா செய்தி நிறுவனம், “ஏமனில் கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கும் சோதனைகளை அதிகப்படுத்தவும் 43 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் தன்னார்வ அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் கப்பல் மூலம் வந்தடைந்துள்ளன. இதில் பிசிஆர் டெஸ்ட் கருவிகள், வென்டிலேட்டர் ஆகியவை அடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

ஏமனில் கரோனாவுக்கு இதுவரை 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் குணமடைந்த நிலையில், 248 பேர் பலியாகி உள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x