

சீனா - இந்தியா இடையே எல்லையில் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் சீன ராணுவம் எல்லையின் மலைப் பிரேதேசங்களில் பயிற்சிகளை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை திபெத் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த சீனா எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைகளிலும் பெரும் பதற்றம் நீடிக்கிறது. 45 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிரிப் படைகளின் இலக்குகளை அழிக்கும் பொருட்டு நியான் ஜிங் தங்குலா, நியென்ச்சென் மலைப் பிரதேசப் பகுதிகளில் சீன ராணுவம் கூட்டுப் பயிற்சியை நடத்தியது. பயிற்சியின்போது துருப்புகளுடன் உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்களையும் சீனா பயன்படுத்தியது என்று திபெத் ராணுவம் தெரிவித்துள்ளது.