Last Updated : 17 Jun, 2020 07:45 AM

 

Published : 17 Jun 2020 07:45 AM
Last Updated : 17 Jun 2020 07:45 AM

கரோனா வைரஸ் நிவாரணம்- பல லட்சம் டாலர்கள் மோசடி: இந்திய-அமெரிக்க ஐடி தொழிலதிபர் மீது கிரிமினல் வழக்கு

அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளரான ராகுல் ஷா (51) என்பவர் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கரோனா வைரஸ் நிவாரண மோசடி செய்யத் துணிந்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து வடக்கு மாவட்டமான இலினாய்ஸில் ராகுல் ஷா மீது கிரிமினல் புகார் தொடுக்கப்பட்டுள்ளதாக பெடரல் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் சிறு தொழில்களைக் காப்பாற்றவும் அதன் ஊழியர்களைத் தக்கவைக்கவும் அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் பிபிபி கேர்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் உண்மையாகப் பயனடைந்து வரும் நிலையில் சிலர் மோசடி செய்யவும் துணிகிறார்கள், இவ்வாறு இரண்டு நாட்களில் இரண்டு இந்திய-அமெரிக்க வர்த்தகர்கள் மீது மோசடி புகார், கிரிமினல் வழக்கு விவகாரம் எழுந்துள்ளது.

வங்கி மோசடி மற்றும் நிதி நிறுவனத்தில் பொய் கூறியது, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் உட்பட இவர் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளன.

புகாரின் படி ராகுல் ஷா கரோனா வைரஸ் உதவி, நிவாரணம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ( CARES) சட்டத்தின் படி வங்கிக் கடனுக்காக 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக அவர் பல பொய்யான மோசடி ஐஆர்எஸ் ஆவணங்களையும் தனக்கு ஆதரவாகக் காட்டியுள்ளார். அதாவது பல தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்கியதற்கான ஐஆர்எஸ் 1099 எம்.ஐ.எஸ்.சி படிவங்களையும் மோசடியாக சமர்ப்பித்துள்ளார் ராகுல் ஷா. ஆனால் அந்தமாதிரி எந்த ஒரு தனிநபருக்கும் ராகுல் ஷா நிவாரணம், உதவி எதையும் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது

மேலும் 2019க்கான காலாண்டுவாரியான சம்பளச் செலவுகளுக்கான ஐஆர்எஸ் படிவங்கள் 941 என்பதையும் சமர்ப்பித்துள்ளார். இதனையடுத்து வங்கி சரிபார்த்த போது இவர் சமர்ப்பித்ததற்கும் சம்பள செலவுகளுக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தது, அவர் குறிபிட்டதை விட குறைந்த சம்பளமே அவர் கொடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

வங்கி மோசடி மற்றும் பொய்யான, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் அமெரிக்காவில் 30 ஆண்டு சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

அமெரிக்க வழக்கறிஞர் ஜான் லாஷ் கூறும்போது, “பே செக் தற்காப்புத் திட்டம் என்பது கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தடுமாறும் சிறு நிறுவனங்களைக் காப்பாற்றும் ஆயுள் ரேகையான திட்டமாகும்” என்றார்.

கேர்ஸ் சட்டம் மார்ச் 29, 2020 அன்று கோவிட்-19 பாதிப்படைந்தோருக்காக நிதி நிவாரண உதவிக்காக உருவாக்கப்பட்டதாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் சிறு தொழில்களைக் காக்கவும், அங்கு பணிபுரிவோரின் வேலையைத் தக்கவைக்கவும், பிற செலவுகளுக்காகவும் 349 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட உருவாக்கப்பட்டது.

இதே பிபிபி எனப்படும் பே செக் புரொடெக்‌ஷன் என்ற திட்டத்தின் கீழ் மே 14ம் தேதியன்று ஷஷாங்க் ராய் என்பவர் தன் நிறுவனத்தில் 250 பணியாளர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான சம்பளமாக 4 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்றும் வங்கியில் இந்தத் திட்டத்தின் கீழ் 10 மில்லியன் டாலர்கள் கடனுக்காக விண்ணப்பித்தது, ஆனால் இது மோசடி என்று கண்டுப்பிடிக்கப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே திட்டத்தின் கீழ் ராகுல் ஷா என்பவரும் பெரிய அளவில் மோசடி செய்ய துணிந்தது அம்பலமாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x