Published : 16 Jun 2020 04:18 PM
Last Updated : 16 Jun 2020 04:18 PM
சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் தரப்பில், “சிங்கப்பூரில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகள், சிறு வணிக நிறுவனங்கள் ஆகியவை திறக்கப்பட உள்ளன. மேலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் பெரும்பாலான பொது நிகழ்வுகளை உரிய சமூக இடைவெளியுடன் நடத்தவும் சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்குள் ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை 40,818 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,366 பேர் குணமடைந்துள்ளனர்.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் தற்போது அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT