Published : 16 Jun 2020 02:24 PM
Last Updated : 16 Jun 2020 02:24 PM

அமெரிக்காவுக்கு ஆறுதல்: கரோனா பலி குறைந்து வருகிறது

அமெரிக்காவில் இரண்டாவது நாளாக கரோனா இறப்பு குறைந்து வருவதாக மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 400க்கும் குறைவான எண்ணிக்கையில் இறப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனா பலி 400க்கும் கீழாகவே பதிவாகியுள்ளது. இருப்பினும் தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

அமெரிக்காவில் கரோனாவால் 21,82,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,18,283 பேர் பலியாகி உள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 81,18,671 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8 வாரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இரு மடங்காகி உள்ளன. மேலும் 42,16,319 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x