Published : 16 Jun 2020 01:12 PM
Last Updated : 16 Jun 2020 01:12 PM
கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்த நிலையில் சிறப்பு அனுமதிகள் இருந்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு பிற நாடுகளிலிருந்து வர இயலும். இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து சிறப்பு அனுமதியோடு வந்த இருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் கரோனா தொற்றைக் கவனமாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதற்காக உலகம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.
நியூசிலாந்தில் 1,506 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT