Published : 16 Jun 2020 10:48 AM
Last Updated : 16 Jun 2020 10:48 AM
பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,88,271 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 20,647 பேர் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,88,271 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு நேற்று மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 43,959 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.
ஆறுதல் செய்தியாக, பிரேசிலில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்தார். மேலும் பிரேசிலில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை அமல்படுத்தின. ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் அதிபர் பேசி வந்தார்.
மேலும் கரோனா விவகாரத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா சரியாக கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
கரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவு தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT