Published : 15 Jun 2020 06:43 PM
Last Updated : 15 Jun 2020 06:43 PM
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு ஜூன் மாத இறுதியில் இரு மடங்காக அதிகரிக்கும் என்று அந்நாட்டின் திட்டக் குழு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் திட்டக் குழு அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானில் கரோனா தொற்று தற்போதுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரிக்கும். சுமார் 3 லட்சம் மக்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இதுவரை 1,44,472 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,729 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் ஏழை நாடு என்றும் ஊரடங்கைத் தளர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் முன்னதாகக் கூறினார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட தன்னார்வலர்கள் குழுவை அந்நாட்டு அரசு ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT