Published : 15 Jun 2020 03:02 PM
Last Updated : 15 Jun 2020 03:02 PM

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று

அமெரிக்காவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.

அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 77% மருத்துவ சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மே இரண்டாம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுக்கூட்டங்கள் காரணமாக மீண்டும் கரோனா எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கு அந்நகரின் ஆளுநர் கியூமோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,93,508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,732 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x