Published : 13 Jun 2020 06:09 PM
Last Updated : 13 Jun 2020 06:09 PM

ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 10 போலீஸார் உட்பட 18 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரு வெவ்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் 18 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் பசாமத் மாவட்டத்தில் காவலர் சோதனைச்சாவடி ஒன்றில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 10 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தத் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கன் அரசு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது அதிபர் அஷ்ரப் கானிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இதுவரை 24,102 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 451 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x