Published : 12 Jun 2020 09:17 PM
Last Updated : 12 Jun 2020 09:17 PM

சவுதியில் கரோனா பாதிப்பு 1,19,942 ஆக அதிகரிப்பு

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிகப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது. 81,029 பேர் கரோனா பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

சவுதியில் அதிகபட்சமாக ரியாத்தில் அதிகம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவுதியில் இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்கு தளர்வுகளும் அளி்க்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x