Last Updated : 12 Jun, 2020 04:54 PM

 

Published : 12 Jun 2020 04:54 PM
Last Updated : 12 Jun 2020 04:54 PM

உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள்; தெற்கு, கிழக்கு ஆசியாவில் வறுமை அதிகரிக்கும்: கரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கோப்புப்படம்

நியூயார்க்

கரோனா வைரஸ் ஏற்படுத்திய உடல்ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்பால் உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள். தெற்காசியாவில் ஏற்கெனவே ஏழ்மையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் இன்னும் மோசமான நிலைக்குச் செல்வார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை யுஎன்யு-டபிள்யுஐடிஇஆர் (UNU-WIDER) எனும் அமைப்புடன் சேர்ந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலக அளவில் பாதிப்பை ஏறப்டுத்திவரும் கரோனா வைரஸால் உலக மக்களில் 100 கோடி பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நாள்தோறும் உலக அளவில் ஏழை மக்கள் 50 கோடி டாலர் அளவுக்கு வருமான இழப்பைச் சந்திப்பார்கள், அடுக்கு வரும் காலங்களில் வறுமையின் தீவிரம், பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

நடுத்தர வருமானம் ஈட்டும் வளரும் நாடுகளில் இந்த வறுமை கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். உலக அளவில் பரவியிருக்கும் வறுமையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றமும் ஏற்படும். தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை நோக்கி உலக வறுமை திரும்பக்கூடும்.

தெற்காசிய நாடுகளில் ஏற்கெனவே வறுமையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் மேலும் மோசமான வறுமைக்குச் செல்வார்கள். உலக அளவில் தெற்காசியாதான் வறுமையில் மோசமாகப் பாதிக்கப்படும்.

உலக அளவில் வறுமையை அதிகரித்த நாடுகளில் இந்தியாவின் பங்கும் இருந்தது. இது தவிர தெற்காசியா, சஹாரா ஆப்பிரிக்காவில் நாடுகள், கிழக்கு ஆசியாவில் உள்ள குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளும் வறுமையால் அதிகமாக பாதிக்கப்படும்.

நைஜிரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் சேர்ந்து 19 சதவீத வறுமையையும், காங்கோ, தான்சானியா, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் ஆகியவை சேர்ந்து 12 சதவீத வறுமையையும் ஏற்படுத்தும்.

ஜி7 நாடுகள், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து, உலக அளவில் கரோனாவால் ஏற்படும் ஏழ்மையைக் களைய 3 கட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x