Published : 12 Jun 2020 01:43 PM
Last Updated : 12 Jun 2020 01:43 PM
ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் மத்ஷிதிசோ கூறும்போது, “ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று 1 லட்சத்தை அடைய சுமார் 98 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது வெறும் 18 நாட்களில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் சமூகப் பரவல் ஆரம்ப நிலையை எட்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகமுள்ள பகுதியாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுத்துள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மேலும், பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவிலும் பொருளாதார ரீதியான கடும் பாதிப்பை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போதுவரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT