தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஆப்கன் அதிபர் ஒப்புதல்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஆப்கன் அதிபர் ஒப்புதல்
Updated on
1 min read

தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “கத்தாரில் தலிபான்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கனில் அமைதி ஏற்பட கத்தார் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டுத் தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து தோஹாவில் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக சமீபத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in