Published : 11 Jun 2020 05:26 PM
Last Updated : 11 Jun 2020 05:26 PM
இந்தியாவில், கரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ தாங்கள் கையாண்ட பணப் பரிமாற்றத் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 34% சதவீத மக்கள் கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் வாழ முடியாது என்று சில தரவுகளுடன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு தான் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அறிக்கையின்படி இந்தியக் குடும்பங்களில் 34% பேர் கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் வாழ முடியாது. நாங்கள் செயல்படுத்திய வெற்றிகரமான பணப் பரிமாற்றத் திட்டத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். இந்தப் பணப் பரிமாற்றத்தின் வெளிப்படைத் தன்மை சர்வதேச சமூகத்தால் பாராட்டப்பட்டது.
கரோனா காலத்தில் பாகிஸ்தான் கடந்த 9 வாரங்களில், ஒரு கோடி ஏழை மக்களுக்கு 12 கோடி வரை வெற்றிகரமாக பணப் பரிமாற்றம் செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா பரவலைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுங்கள் என்று இம்ரான்கான் பதிவுக்குக் கீழே நெட்டிசன்கள் பலர் விமர்சித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT