

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டி அதிபர் பியர் குருன்சிஸா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுந்த வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவருக்கு வயது 55.
இதுகுறித்து புருண்டி அரசு வெளியிட்ட அறிக்கையில், “புருண்டி அதிபர் பியர் குருன்சிஸா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச சமூகம் பியர் குருன்சிஸாவின் மரணத்தை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக பியர் குருன்சிஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
அதிபர் இறப்பைத் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புருண்டி அரசு தெரிவித்துள்ளது. சுமார் 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 15 ஆண்டுகள் புருண்டியை ஆட்சி செய்தார் பியர் குருன்சிஸா. இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.