Published : 10 Jun 2020 06:31 AM
Last Updated : 10 Jun 2020 06:31 AM
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்தமாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீதுபோலீஸார் கொலை வழக்குப் பதிவுசெய்தனர். அவருடன் இருந்த 3போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சவுவின் ஜாமீனில் வெளியில் வர முயற்சித்து வருகிறார். இதுதொடர்பான மனுவை ஹென்னபின் கவுன்டி மாவட்ட நீதிமன்றம்கடந்த திங்கட்கிழமை விசாரித்தது.பின்னர், டெர்ரக் சவுவினுக்கு ஜாமீன்வழங்க ஒரு மில்லியன் டாலர் நிபந்தனைகளுடன் செலுத்த வேண்டும். (ரூ7.5 கோடி) நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் (ரூ.9.4 கோடி)செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் பிணைத்தொகை நிர்ணயித்துள்ளது. மேலும், போலீஸ்காரர் டெர்ரக் சவுவின், தனது துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எந்தப் பகுதியிலும் பாதுகாப்பில் ஈடுபட கூடாது. மாகாணத்தை விட்டு வெளியேற கூடாது. உயிரிழந்தஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள கூடாது என்றுநீதிமன்றம் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை டெர்ரக் சவுவின் ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றம் நிர்ணயித்துள்ள பிணைத்தொகையை அவர் செலுத்திய பிறகு டெர்ரக் சவுவின் ஜாமீனில்விடுவிக்கப்படுவார்.
முன்னதாக குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போலீஸ்காரருக்கு ஜாமீன் வழங்கும் போது அதிக பிணைத் தொகை மற்றும் கடும் நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் மேத்யூ பிராங்க் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். அதன்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT