Published : 09 Jun 2020 02:07 PM
Last Updated : 09 Jun 2020 02:07 PM

மோதல் ஏற்பட்ட எல்லையில் சீன படைகள் வாபஸ்? - அமைதி திரும்பும் என அறிவிப்பு

பெய்ஜிங்

இந்தியா எல்லைப் பகுதியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண இரு தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பீஜிங் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் சூழ்நிலை நிலையாகவும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது. எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண இரு தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனாவும் இந்தியாவும் தயாராக உள்ளன.

எல்லை பிரச்சினை தொடர்பாக சமீபத்தில் ராணுவ மற்றும் தூதரக ரீதியில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான தகவல் தொடர்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சீன வெளியுறவுத் துறை கருத்துகளின் அடிப் படையில், லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படி யாக வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x