Published : 09 Jun 2020 02:19 PM
Last Updated : 09 Jun 2020 02:19 PM
தென் கொரியாவுடன் அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டிக்க இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனம் தரப்பில், “செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தென்கொரியாவுடன் இருந்த அனைத்து தகவல் தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்படும். தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து , அந்நாட்டுடன் தேவையற்ற விஷயங்களிலிருந்து விடுவித்து இருப்பதே தற்போதைய தீர்மானத்தின் முதல் படி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகொரியா ராக்கெட் ஏவுதளச் சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை நடத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென்கொரியா மீது இத்தகைய நிலைப்பாட்டை வடகொரியா எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT