Published : 09 Jun 2020 10:41 AM
Last Updated : 09 Jun 2020 10:41 AM

கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து தொற்று பிறருக்குப் பரவுவது அரிதே: உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக 1,30,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனா அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து தொற்று பரவுவது அரிதாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கெப்ரியாசஸ் ஜெனிவாவி்ல் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

“ கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுவரை இல்லாத அளவு அதிப்பட்சமாக உலகம் முழுவதும் 1,30,000 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரேசில் தொடர்ந்து கரோனா பரவலின் மையமாக உள்ளது. சிங்கப்பூரில் தொற்று ஏற்பட்டவர்கள் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. கரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து தொற்று அவ்வளவு எளிதாக பரவுவது இல்லை.

தற்போது நாங்கள் உலக நாடுகளில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பரவலை தடுப்பதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்,பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x