Published : 06 Jun 2020 11:04 AM
Last Updated : 06 Jun 2020 11:04 AM
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக இருப்பதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரேசிலில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
இதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை பிரேசில் அதிபர் பேசும்போது, “ உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் கூறும்போது, ”தென் அமெரிக்க நாடுகளில் கரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரேசில் இதனை தெரிவித்துள்ளது.
பிரேசிலில் கரோனா வைரஸால் இதுவரை 6,46,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,047 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
210 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில் கடந்த இருவாரமாக கரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது.
கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 19, 65,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT