

ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 15 பேர் பலியாகினர்.
இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் கூறும்போது, “ எதிரிகள் விதிமுறையை மீற முயற்சித்தார்கள். இதனைத் தொடர்ந்து வியாழன் இரவு பக்திதா மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தாண்டே பதன் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கான் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக அம்மாவட்ட அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இத்தாக்குதலில் 2 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை இத்தாக்குதல் குறித்து தலிபான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை
ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒப்பந்தத்துக்கான காலம் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக சமீபத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.